புகை பிடிப்பதை நிறுத்தினால்..!


புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.
புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.
சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.
''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.  
பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!
பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?

4 கருத்துகள்:

  1. புகைப்பிடிப்பதை நிறுத்தினால் என்னவாகுமோ என பயந்தே பலர் புகைப்பிடிப்பதை நிறுத்தாமல் அதைத் தொடர்வார்கள். அப்படியெல்லாம் இல்லை என அவர்கள் தெளியும்விதமாக நல்லதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். உரியவர்கள் இதைப் படித்து புகைப்பிடிப்பதை நிறுத்த முன்வர வேண்டும்.
    - சைதை முரளி

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ,திரு. சைதை முரளி அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. புகைப்பிடிப்பதை நிறுத்தினால் என்னவாகுமோ என பயந்தே பலர் புகைப்பிடிப்பதை நிறுத்தாமல் அதைத் தொடர்வார்கள். அப்படியெல்லாம் இல்லை என அவர்கள் தெளியும்விதமாக நல்லதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். உரியவர்கள் இதைப் படித்து புகைப்பிடிப்பதை நிறுத்த முன்வர வேண்டும்.

    பதிலளிநீக்கு